"வெப்ப அலை.." இந்த 20 நாட்கள் தப்பி தவறி கூட வெளியே வராதீங்க.. இந்திய வானிலை மையம் பரபர அலர்ட்
டெல்லி: வரும் ஜூன் மாதம் வரை நாட்டின் பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் வெப்ப அலை சம்பவங்கள் அதிகம் ஏற்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரும் ஜூன் மாதம் வரை கடுமையான மற்றும் வறண்ட கோடைக்காலம் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 10 முதல் 20 நாட்கள் வரை வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வெப்ப அலை: மத்தியப் பிரதேசம், வடக்கு மற்றும் கடலோர மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் ஏப்ரல் மாதத்தில் பகலில் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருக்கும். வழக்கமாக 1 முதல் 3 நாட்கள் வரை ஆந்திரா, சௌராஷ்டிரா-கட்ச், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச பகுதிகளில் வெப்ப அலை இருக்கும் நிலையில், அது அதிகபட்சம் 8 நாட்கள் வரை இருக்கும்.
பருவமழைக்கு முந்தைய மழை இந்த மாதம் சராசரியை விடக் குறைவாக இருக்கும்.. முக்கியமாகக் கடலோர இந்தியா, கிழக்கு மற்றும் தென் தீபகற்ப இந்தியாவில் மழை குறைவாகவே இருக்கும். இதனால் இந்த பிராந்தியங்களில் பிப்ரவரி முதல் வறண்ட நிலை தொடர்கிறது.
வானிலை மையம்: இது குறித்து இந்திய வானிலை மைய இயக்குநர் கூறுகையில், "நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு கோடைக் காலத்தில் வெப்பம் இயல்பைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும். ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், வடக்கு ஒடிசா, கங்கை நதியை ஒட்டியுள்ள மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகள் மட்டும் இயல்பான வெப்பம் அல்லது அதற்கு கீழ் வெப்பம் குறையக்கூடும்" என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த மூன்று மாதங்களில் 10 முதல் 20 நாட்கள் வரை வெப்ப அலை நீடிக்கும். பருவமழைக்கு முந்தைய மழை பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விடக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வெப்ப அலை: ராஜஸ்தான், குஜராத், சௌராஷ்டிரா-கட்ச், மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் கோடைக் காலங்களில் வெப்ப அலை அதிகம் வீசும். மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அதிக வெப்பத்தால் பதிவு செய்யப்படும் எல் நினோ நிகழ்வு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. கடந்த ஆண்டு டிசம்பரில் இது உச்சத்தை எட்டிய நிலையில், அதன் பின்னர் எல் நினோ நிலைமைகள் குறையத் தொடங்கின, ஆனால் வெப்பம் முழுமையாகக் குறையவில்லை. சர்வதேச அளவில் வெப்பம் கணிசமாக உயரவே செய்தது.. இந்த எல் நினோ நிகழ்வு தான் இந்தியாவில் மழையைக் குறைக்கிறது. மேலும், சர்வதேச அளவில் வெப்பம் அதிகரிக்கவும் காரணமாக இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், தென் இந்தியாவில் இயல்பான வானிலையை விட வெப்பம் அதிகமாக இருந்தது. மார்ச் மாத இறுதியில் மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, சவுராஷ்டிரா-கட்ச் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்ப அலைகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவின் அகோலா மற்றும் ராஜஸ்தானின் பலோடி பகுதிகளில் கடந்த வாரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸை எட்டி இருந்ததாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications