விடிய விடிய வெளுத்து வாங்க போகும் மழை.. கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம் கூறியிருப்பதாவது:- "தேனி, தென்காசி, நெல்லை, கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடக்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்றும், இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் மையப்பகுதியில் இருந்து தெற்கு லட்சத்தீவு பகுதிகள் வரை, தென் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளில் இருந்து மரத்வாடா வரை கடலோர கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதனால் இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 13, 14 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்" என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications