இரவு முழுக்க வெளுத்து வாங்கிய மழை.. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. வட மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் நேற்று மாலை முதல் காலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இடையே கரையை கடக்க கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இன்று 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 19-08-2025 முதல் 23-08-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 - 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள்: இன்றும், நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications