10 மாவட்டங்களில் இன்று கனமழை பிச்சு உதறப்போகுது.. வானிலை மையம் விடுத்த அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை சனிக்கிழமையும் பல இடங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி, வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில், தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இதற்கிடையே கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மாா்ச் 3 ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்று மழை பரவலாக பெய்தது.
இந்நிலையில், தென்தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 28) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மார்ச் 1) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (மார்ச் 2) மார்ச் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 3 ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. மார்ச் மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (பிப் 28) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடலில் வெள்ளி, சனிக்கிழமை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 30 மி.மீ. மழை பதிவானது. ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ஊத்து (திருநெல்வேலி), பாபநாசம் (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் தலா 20 மி.மீ.மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications