பேய் மழை வெளுக்கப் போகுது.. கூல் ஆகப் போகுது தமிழ்நாடு! ‘இந்த’ மாவட்டங்கள் ரொம்ப ரொம்ப முக்கியம்!
சென்னை: கோடை வெயிலின் தாக்கத்தில் சிக்கித் தவித்த மக்கள் விடுபடும் வகையில் கோடை மழை கை கொடுத்திருக்கிறது. வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் தாமதமாக துவங்கினாலும், வழக்கம் போல் வெயில் அதன் வேலையை காட்டி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் கடுமையான கோடை வெயில் கொளுத்திய நிலையில் மே முதல் வாரத்தில் இருந்து அந்த சூழல் சற்று மாறி உள்ளது.
சில பகுதிகளில் கடுமையான வெயில் கொளுத்தி வந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்றைய வானிலை
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும் சுமார் 1.5 மீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
கனமழை மாவட்டங்கள்
இதனால் இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.
வானிலை அப்டேட்
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவர வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என கூறப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications