Rain: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பதை பார்க்கலாம். சென்னையில் இன்று லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அது போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 24ஆம் தேதி வரை ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீர் சாரல் மழை அப்பகுதியை குளிர்வித்தது. வண்டிமேடு, கீழ்பெரும்பாக்கம், முண்டியம்பாக்கம், திண்டிவனம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறு பயணித்தனர்.
ஓசூர் சுற்றுவட்டாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த சாரல் மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கிய நிலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தேன்கனிக்கோட்டையில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
திருவண்ணாமலையிலும் கனமழை பெய்தது. சென்னையில் காலை முதலே ஜில்லென்ற காற்று வீசி வருகிறது. நேற்றைய தினம் சூரியனை பார்க்க முடியவில்லை. வண்டலூர் பகுதிகளில் எல்லாம் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications