வங்கக் கடல் ஓரம் கொட்டப்போகும் மழை.. ராமநாதபுரம் டூ கன்னியாகுமரி வரை 7 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில், இன்று ராமநாதபுரம் தொடங்கி கன்னியாகுமரி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக,

கன்னியாகுமரி
திருநெல்வேலி
தென்காசி
தூத்துக்குடி
விருதுநகர்
ராமநாதபுரம்
ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மார்ச் 3ம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 4 முதல் 7 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (01-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (02-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தொடங்கி 5ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்று பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தொடங்கி 5ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்:
இன்று தெற்கு கேரளா, மாலத்தீவு -லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல், அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச் 3 முதல் 5 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை:
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதலை பொறுத்த வரை இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். 3 முதல் 5ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.












Click it and Unblock the Notifications