பேய் மழை வெளுக்கப் போகுது..19 மாவட்டங்களை லாக் செய்த மெட்! மறக்காம குடை எடுத்துட்டு போங்க மக்களே!
சென்னை: தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், வராது வந்த மாமணியாக கோடை மழை கை கொடுத்துள்ளது. கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் தாமதமாக தூங்கினாலும், வழக்கம் போல் வெயில் அதன் வேலையை காட்டி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் கடுமையான கோடை வெயில் கொளுத்திய நிலையில் மே முதல் வாரத்தில் இருந்து அந்த சூழல் சற்று மாறி உள்ளது.

சில பகுதிகளில் கடுமையான வெயில் கொளுத்தி வந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்றைய வானிலை
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளிலிருந்து தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை உள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
கனமழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
வானிலை முன்னறிவிப்பு
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவர வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications