நாமக்கல் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.. ராசிபுரத்தில் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கியது. ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. ஊட்டி பிங்கர்போஸ்ட், காந்தல், ரோகிணி, தலைகுந்தா உள்ளிட்ட இடங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது.

அதேபோல, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், மெட்டாலா, வடுகம், புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் கனமழை பெய்திருந்தது. ராசிபுரத்தில் 2வது நாளாக இன்று பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் மழை நீர் அதிகளவில் தேங்கியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கீழ்கோத்தகிரி எஸ்டேட் பகுதியில் 11 செ.மீ மழையும், விண்ட் வொர்த் எஸ்டேட் பகுதியில் 10 செ.மீ, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், தக்கலை ஆகிய இடங்களில் தலா 9 செமீ மழையும் பெய்துள்ளது. கன்னியாகுமரி, ஆத்தூர் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழை, ராசிபுரம் , உசிலம்பட்டி, நீடாமங்கலம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.

இன்று இரவு 7 மணி வரை 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications