ஈசிஆர் டூ சென்னைக்கு மெல்ல நகரும் மேகங்கள்! அங்கேயே நீடித்தால் கனமழை பெய்யும்! வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தீபாவளிக்காக கடைகளுக்குச் செல்வோர் மழை கோட், குடையுடன் செல்ல வேண்டியது அவசியம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் மேகக் கூட்டங்கள் மெதுவாக சென்னை நகருக்குள் வருகிறது. காலை வேளையில் அந்த மேகக் கூட்டங்கள் அப்படியே நீடித்தால் சென்னைக்கு நல்ல மழையை தரும். அது போல் அந்த மேகக் கூட்டங்களால் கேளம்பாக்கம்- சிறுச்சேரி பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய இன்னொரு சிறந்த நாளாக இன்று அமைகிறது. தீபாவளி ஷாப்பிங்கிற்காக வெளியே செல்ல வேண்டியவர்கள் மழை கோட் அல்லது குடையுடன் செல்லவும்.
பின்குறிப்பு- தீபாவளிக்கு மேற்கண்ட 4 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை என்ன ஒரு நாள். எல்லா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. இந்திய பெருங்கடலில் இருந்து குறைந்த காற்றழுத்தமானது அரபிக் கடலை நோக்கி நகர்வதால் தென் தமிழகத்திற்கு அதிகபட்ச கனமழையை கொடுக்கும்.
தமிழகத்தில் அதிக மழை பொழிவுடன் அக்டோபர் மாதம் மிக கூடுதல் மழையுடன் முடிய போகிறது. தென்தமிழகத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்ப போகின்றன. இந்த குறைந்த காற்றழுத்தத்தால் தமிழகத்திற்கும் விரிவடைகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தில் இருந்து விருதுநகர், தேனி மாவட்டங்களிலும் கனமழை கிடைக்கிறது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மழை அளவு 100 மி.மீ. அளவை கடந்துவிட்டது. விருதுநகரில் 200 மி.மீ. மழை ராஜபாளையத்தில் உள்ள சாஸ்தாகோவில் அணையில் 208 மி.மீ. மழையும் ராஜபாளையம் நகரில் 176 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் கடந்த 3 தினங்களில் 120 மி.மீ மழை பெய்துள்ளது. நேற்று முன் தினம் 154 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் யாருக்கும் பாதகமில்லாமல் 30 முதல் 60 மி.மீ.வரை மழை பெய்துள்ளது. அது போல் இன்றும் தொடரும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அண்மைக்காலமாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விலகி வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. அதிலும் தீபாவளி பண்டிகைக்கு மழை வருமா, வராதா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் பட்டாசு வியாபாரம் பாதிக்கும் என வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மக்களும் வாங்கி வைத்த பட்டாசுகளை வெடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் அதிகமாகவே இருக்கும் என சென்னை வானிலை மைய தென்மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications