ஒரே நாளில் 30 செ.மீ பதிவு.. சென்னை + புறநகர் பகுதிகளை புரட்டி எடுத்த மழை.. எங்கே அதிகம்? இதோ டேட்டா
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இன்றும் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 30 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கத்திபாக்கத்தில் 25 செ.மீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, சேலம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் கனமழை பெய்து வருகிறது.

கொட்டி தீர்த்த கனமழை: இதன் காரணமாக நேற்று இந்த 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை வரை தொடர்ந்தது. இடையில் லேசாக விட்டு பிடித்த மழை மீண்டும் நேற்று காலை 10 மணிக்கு பெய்ய தொடங்கியது. இதன் பின்னர் லேசான மழையாக தொடர்ந்தது. மீண்டும் மதியத்திற்கு பிறகு மழை கொட்ட தொடங்கியது.
இதனால் சென்னையின் முக்கிய நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேரம் செல்ல செல்ல மழை நீர் குடியிருப்புகளுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் புகுந்தது. குறிப்பாக பள்ளிக்கரணை பசும்பொன் நகரில் மழை நீர் 1 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இவ்வாறாக சென்னையில் மொத்தம் 103 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு: அங்குள்ள மக்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வேறு இடத்திற்கு தஞ்சம் அடைந்தனர். உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செமீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்ததாக செங்குன்றத்தில் 28 செ.மீட்டரும், ஆவடியில் 25 செ.மீட்டர் மழையும், தாமரைப்பாக்கம் மற்றும் பொன்னேரியில் தலா 16 செமீட்டர் மழை பெய்துள்ளது.
இதேபோன்று கும்மிடிப்பூண்டியில் 9.5 செமீட்டரும், திருவள்ளூரில் 9 செமீட்டரும் மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருப்போரூர், கேளம்பாக்கம், தாம்பரம், மதுராந்தகத்தில் தலா 6 செ.மீ மழை பெய்துள்ளது. பூந்தமல்லியில் 8.5 செமீ மழை பெய்துள்ளது. திருத்தணியில் 7.2 செமீட்டரும், பள்ளிப்பட்டில் 7.1 செமீட்டரும், கொரட்டூரில் 7.7 செ.மீட்டரும், ஊத்துக்கோட்டையில் 9.30 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக செங்கல்பட்டில் 30 ஏரிகளும், காஞ்சிபுரத்தில் 5 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் 24 மணி நேரத்தில் மழை அளவு:
சென்னையில் நேற்று 15 ஆம் தேதி காலை 6 மணியில் இருந்து இன்று 16 ஆம் தேதி காலை 6 மணி வரை அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 25 செ.மீ மழை பெய்துள்ளது.
* கத்திப்பாக்கம் - 25 செ.மீ
* மணலி புதுநகர் - 24.5 செ.மீ
* பெரம்பூர் - 22.4 செ.மீ
* கொளத்தூர் - 22.4 செ.மீ
* அயப்பாக்கம்- 22.3 செ.மீ
* அண்ணா நகர் மேற்கு- 20.4 செ.மீ
* திருவொற்றியூர் - 20 செ.மீ
* புழல் - 20 செ.மீ
* மணலி- 19.5 செ.மீ
* வேளச்சேரி- 18.5 செ.மீ
சென்னையில் 48 மணி நேரத்தில்:
கடந்த 48 மணி நேர மழை அளவை பொறுத்தவரை சென்னை கொளத்தூர் மற்றும் திருவிக நகரில் 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மணலி மற்றும் அம்பத்தூரில் தலா 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மலர் காலனி, கத்திவாக்கத்தில் தலா 29 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புழல் 25.5 செமீ, ராயபுரத்தில் 25.4 செ.மீட்டரும், அடையாறில் 24.8 செ.மீட்டரும், வானகரத்தில் 24.5 செமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மாதவரம் 24.2 செ.மீட்டர் மழையும், திருவொற்றியூரில் 23.6 செ.மீட்டரும், கோடம்பாக்கத்தில் 23 செமீட்டரும், அண்ணாநகரில் 22.9 செமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications