அடுத்த 2 மணி நேரம்.. சென்னை முதல் குமரி வரை.. 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை முதல் குமரி வரை 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 11.40 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் முழுக்க கொட்டி தீர்த்த கனமழை கடந்த மாத இறுதியில் சற்று குறைந்தது. மாதம் பிறந்ததும் மீண்டும் மழை வேலையை காட்டியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில் தான் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை முதல் குமரி வரை 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மைய அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று காலை 11.40 மணி வரை 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications