நீலகிரி + கோவையில் இன்று கொட்டப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றும் நீலகிரி, கோவைக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி மே மாதத்தில் வெயில் முடிந்துவிடும். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெயில் வாட்டி எடுத்தது. இதற்கு எல் நினோதான் காரணம் என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். வெயிலின் தாக்கம் மக்களை மட்டுமல்லாது வன விலங்குகளையும் கடுமையாக பாதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்பட்டது.

அதற்கேற்றார்போல இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டது. வழக்கமாக வேலூர் தொடங்கி ஈரோடு வரை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை கோவை, நீலகிரி என வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. ஊட்டியில் இதுவரை பதிவாகாத அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. எனவே நீர் நிலைகள் முற்றிலும் காய்ந்து போயின. எதிர்பார்த்த அளவுக்கு குளுமை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்தன. அதேபோல உள்ளூர் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, நீலகிரியில் இந்த நிலைமை எனில், மற்ற மாவட்டங்களில் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. ஆனால் இந்த வெயில்தான் வெப்பச்சலனத்தை ஏற்படுத்தி தற்போது நல்ல மழையை கொண்டு வந்தது.
வழக்கமாக ஜூன் மாதம் 1ம் தேதியன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்த முறை மே மாதம் 30ம் தேதியே மழை தொடங்கிவிட்டது. அந்த வகையில் கடந்த 29ம் தேதி நீலகிரியின் பந்தலூர் பகுதியில் 278 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. எனவே ஊட்டி மற்றும் பந்தலூர் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கடந்த சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கனமழை நீடித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை பந்தலூா் (நீலகிரி) - 70, விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - 50. மேலும், கோவை, புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் 10 மிமீ முதல் 40 மிமீ வரை மழை பதிவானது.
நீலகிரியில் இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications