சென்னை, புறநகர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை! பால்கனியிலிருந்து பறக்கும் பொருட்கள்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாலைகளில் புழுதி பறக்கும் வகையில் காற்று பலமாக வீசி வருகிறது.
சென்னையில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் காலையில் அமைந்தகரை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வளசரவாக்கம், ஆலந்தூர், மாதவரம், புழல், செங்குன்றம், மணலி, கொளத்தூர், நங்கநல்லூர், வடபழனி, அசோக்பில்லர், கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அது போல் மதுரவாயல், திருமுல்லைவாயல், முகப்பேர், அம்பத்தூர், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. நேற்று வரை கோடை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பகல் 1 மணி வரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை பெய்வதுடன் ஆங்காங்கே சூறைக்காற்றும் வீசிவருகிறது. சென்னையில் கோடை வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.
ஆவடியில் கனமழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் அங்குள்ள விளம்பர பலகைகள் கிழிந்து மின் கம்பிகள் மீது விழுந்தந. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
கனமழையால் சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 3 விமானங்கள் தரையிறங்க முடியாத நிலையில் உள்ளன. மும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. பொன்னேரியில் சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னை தரமணியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதில் ஒரு அரசுப் பேருந்து சிக்கியதால் பரபரப்பு எழுந்துள்ளது. திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிரக்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை உள்ளது என்கிறார்கள்.
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடதமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை போலவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். அது போல் சென்னையில் மதியம் 2.30 மணி வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications