அடுத்த ஒரு மணி நேரம்.. தஞ்சை - குமரி வரை.. 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை! வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தஞ்சை முதல் குமரி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, குமரி, நெல்லை, மதுரை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலையில் விட்டு விட்டு பெய்த மழை, மதியம் 3 மணியளவில் பெரிய மழையாக பெய்தது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று மதியம் 3 மணியளவில் கனமழை கொட்டியது.

அம்பாசமுத்திரம், ஆலங்குளம், பாபநாசம், கடையம், தென்காசி உள்பட பல இடங்களில் கனமழை கொட்டியது. இதேபோன்று தூத்துக்குடி, குமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தஞ்சை முதல் குமரி வரை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில், அதாவது இன்று இரவு 7 மணி வரை தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தஞ்சை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த ஒரு வாரத்திற்கான மழை அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:- "பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
3 ஆம் தேதி வரை
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மார்ச் 3ம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 4 முதல் 7 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் வானிலை எப்படி?
சென்னையை பொறுத்தவரை இன்று (01-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (02-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications