திருப்பத்தூர் டூ திருப்பூர்.. இன்று 11 மாவட்டங்களில் கனமழை! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று கோவை மற்றும் திருப்பூரில் கனமழை புரட்டி எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று திருப்பத்தூர் முதல் திருப்பூர் வரை 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ அளவுக்கு கனமழை பெய்திருக்கிறது. மழை காரணமாக திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 கார்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று கோவை, திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 21ம் தேதி மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, அன்று மாலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.
இது நேற்று காலை 5.30 மணி அளவில், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில், பாரதீப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 750 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 730 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புயலாக வலுபெறக்கூடும். புயுல் வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும். இது, வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24 ஆம் தேதி இரவு 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.
அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications