அடுத்த 2 மணி நேரம்.. கோவை முதல் குமரி வரை.. 6 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை!
சென்னை: தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்தாலும், தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் கோவை முதல் குமரி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
உள் தமிழகம் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பதிவாகியுள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்றும் மழை பெய்தது. விருதுநகர், தென்காசி மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

கோவை முதல் குமரி வரை
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. எனினும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாலை 4 மணிக்கே மழை கொட்ட ஆரம்பித்தது. சுமார் அரை மணி நேரமாக கனமழை கொட்டி தீர்த்தது.
ஏற்கனவே அவ்வப்போது பெய்து வரும் மழையினால் பல ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கிடையே கோடை வெயில் போல சுட்டெரித்து வரும் வெயிலுக்கு இடையே மழை பெய்து வருவதால் ஒரு தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை தொடரும்
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான மழை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
* இதன் காரணமாக இன்று (18-03-2025) முதல் வரும் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 23 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 24 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கும்
இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, இன்று முதல் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications