ராமநாதபுரம், சிவகங்கையில் இன்று கனமழை வெளுக்கும்.. புத்தாண்டில் கிளைமேட் எப்படி? வானிலை அப்டேட்
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் புத்தாண்டு தினமான நாளையும் தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாகவே பெய்துள்ளது. மாறாக பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடைசி இருவாரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாகவே இருந்து வருகிறது.

ராமநாதபுரம், சிவகங்கை
காலை மற்றும் மாலை வேளைகளில் பனியின் தாக்கமும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. ராமநாதபுரம், சிவகங்கையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பிலும் இன்று ராமநாதபுரம், சிவகங்கையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
புத்தாண்டில் கிளைமேட் எப்படி?
குறிப்பாக இன்று ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை புத்தாண்டு அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை மறுநாள் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வறண்ட வானிலை தான்
வரும் 3 ஆம் தேதி தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வரும் 4 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 5, 6 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை
31-12-2025 மற்றும் 01-01-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 02-01-2026 முதல் 04-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட படிப்படியாக குறையக்கூடும்.
சென்னையில் கிளைமேட் எப்படி?
சென்னையில் இன்று (31-12-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (01-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 31-12-2025 மற்றும் 01-01-2026: எச்சரிக்கை ஏதுமில்லை. 02-01-2026 முதல் 04-01-2026 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications