இரவு 7 மணி வரைக்கும் கொட்டப்போகுது மழை.. இந்த 9 மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க! வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நேற்றும், இன்றும் பரவலாக மழை பெய்த நிலையில் இரவு 7 மணி வரைக்கும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மதெற்கு கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தற்போது பருவமழை நிறைவடையும் தருவாயில் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரு நாட்களாக தமிழகத்தில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
நேற்று தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இன்றும் மழை தொடர்ந்தது. இந்த நிலையில் இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிபில் கூறப்பட்டிருப்பதாவது:-
9 மாவட்டங்களுக்கு அலர்ட்
"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கூடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று மழைக்கு சான்ஸ்
13 ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையில் இன்று (11-01-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications