விட்டாச்சு லீவு.. கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகாலையில் பெய்யத் தொடங்கிய மழை இரவு 8 மணியை தாண்டியும் விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் கூறியிருப்பதால், வெள்ளிக்கிழமை நெல்லை மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதேபோன்று தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வங்க க்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தமிழக கடலோரப் பகுதிகளை நேற்று இரவு நெருங்கியது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் இன்று அதிகாலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்தது.

இதேபோல் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இடையிடையே கனமழையும், தொடர்ந்து லேசான தூரல் மழையாகவும் 12 மணி நேரத்தை தாண்டியும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக நீர் நிலைகளிலும் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது.
இந்த மழை நாளையும் தொடரும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளையும் அதிகனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதேபோன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை வெள்ளிக்கிழமை நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வானிலை மையம் எச்சரிக்கை விட்டிருப்பதால் பாதுகாப்பு கருத்து நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதேபோல் தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு கரையோற மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று தென்காசி மாவட்டத்திலும் கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ளார்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதாலும், இன்று மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் பாதுகாப்பு கருதி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்.
அதேபோல விழுப்புரம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications