வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்.. நெல்லை, தூத்துக்குடியில் நாளை பொது விடுமுறை.. அரசு அறிவிப்பு
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை பொது விடுமுறையை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் விடாமல் பெய்த மழையால் நான்கு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாமிபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கரையோர பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பல இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தனித்தீவு போல கிராமங்கள் காட்சி அளிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடியில் நாளையும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், இன்னும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப 2 நாட்கள் ஆகும் என்பதாலும் நாளை நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் பொது விடுமுறையை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அத்தியாவசிய தேவை பொருட்களான மருந்து மற்றும் பால் சேவைகளுக்கு மட்டும் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications