நீலகிரி-கோவையை சுத்து போடும் மேகங்கள்! அவசரமாய் பறக்கும் என்டிஆர்ஃப்.. ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு
சென்னை: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கை தொடர்பாக, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இரு மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலர் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் திறந்துவிடப்படுகிடது.

இதனை தொடர்ந்து 31ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பல்துறை செயலாளர்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் காவிரி ஆற்றுப்படுகை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
► நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

►மழைக்காலத்தில் மலை வாசஸ்தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஊடகங்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்க வேண்டும்.
►பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பல்துறை மண்டலக் குழுக்களை அந்த இடங்களில் முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.
►நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய சாலைப் பகுதிகளை நெடுஞ்சாலைத் துறையினர் கண்டறிந்து உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
►நிலச்சரிவால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்ப வேண்டும்.
►நிலச்சரிவு மற்றும் மழை காரணமாக விழும் மரங்களை அகற்றுவதற்குத் தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
►முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவையினையும் பயன்படுத்தி மீட்பு. நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

►மேலும், தேவைப்படும் நேரங்களில் அண்டை மாவட்டங்களிலிருந்து நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு தீயணைப்பு படை வீரர்களை அனுப்பி வைக்கவும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களை உடனடியாக அனுப்பி வைக்கவும். சாலை சீரமைப்புப் பணிகளை கண்காணிக்க, நீலகிரி மாவட்டத்திற்கு நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளர்களை அனுப்பி வைக்கவும் தொடர்புடையத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
பின்னர், மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுவது தொடர்பாக காவிரி ஆற்றுப்படுகையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்.
►அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடுவது குறித்து பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும்.

►ஆறுகள் மற்றும் கால்வாய்களில் அதிக வெள்ளம் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் நீரில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்க வேண்டும்.
►தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
►நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, தங்க வைக்கப்படும் நபர்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர். சுகாதாரம். மருத்துவம் மற்றும் மின்சார வசதிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
►ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை பண்டிகையின் போது, பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்க வேண்டும். அத்தகைய இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக தண்ணீரில் இறங்கி குளிப்பதைத் தவிர்க்க போதுமான தடுப்புகள் ஏற்படுத்தி, காவலர்களை பணியமர்த்த வேண்டும். மேலும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் நீச்சல் வீரர்கள் மற்றும் மீனவர்களை நிலைநிறுத்த வேண்டும்.
►ஆபத்தான மற்றும் அபாயகரமான இடங்களில் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் மக்கள் செல்வதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ரோந்துப் பணி மேற்கொள்ள வேண்டும்.
►வெள்ள நீர் செல்லும் தாழ்வான பாலங்கள் மற்றும் தரைப்பாலங்களில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
►பாதிப்பிற்குள்ளான இடங்களுக்கு அருகில், மணல் மூட்டைகள். சாக்கு பைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
►நீர் வழித்தடங்களில் உள்ள கழிவுகளை அகற்றி, வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
►மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஆற்றுப்படுகை மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு சென்று ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.
►திருநெல்வேலி மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது." என்றார்.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையின் இரண்டு குழுக்கள் கோவை, நீலகிரிக்கு விரைகின்றன. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டதால் துணை கமாண்டண்ட் தலைமையில் குழு விரைகிறது. இரண்டு குழுக்களை சேர்ந்த 60 பேர் நீலகிரி, கோவை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications