கோவையை மிதக்க வைத்த பேய் மழை.. மேட்டுப்பாளையம் ரயில்வே பாலத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்
கோவை: கோவையில் இன்று மாலை முதல் இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கோவை மேட்டுப்பாளையம் அருகே கோட்டைப்பிரிவில் இருந்து ஒன்னிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. இது தொடபான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
கோவையில் இன்று மாலையில் இருந்து பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலையில் வெள்ளம் ஆறு போன்று ஓடியது. தொடர்ந்து இரவு வரை மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கோவை மட்டும் இன்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில அடி தூரம் கூட கண்னுக்கு தெரியாத அளவுக்கு மிக கனமழை கொட்டி தீர்த்தது. இன்று மாலை முதல் இரவு வரை தொடர்ந்து பெய்த கனமழையால் கோவையில் பல்வேறு இடங்களும் வெள்ளக்காடாகின.
இதனிடையே, மேட்டுப்பாளையம் அருகே கோட்டைப்பிரிவில் இருந்து ஒன்னிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. இது தொடபான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கோவையில் பெய்த கன மழை காரணமாக கோவை ரயில்நிலையம் சாலை, மருத்துவமனை சாலை, சுங்கம், ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
This is my area side only @itisprashanth Anna 😵💫
— kkkka (@Hari454440071) October 22, 2024
Near karamadai kottai pirivu train bridge 🌉 😵💫 pic.twitter.com/rwco5tsh8i
கோவை லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையில் இன்று பெய்த கனமழையால் அவினாசி சாலையில் உள்ள SBI வங்கி கீழ்தள பார்க்கிங்கில் மழைநீர் புகுந்தது.
அந்த வீடியோவில் 2 கார்கள் ஒரு ஆம்னி சிக்கியதாக தெரிகிறது. மேலும் அந்த வீடியோவை செல்போனில் பதிவு செய்தவர்கள் பேசும்போது, காரின் உள்ளே ஒருவர் சிக்கியிருக்கலாம் என்று அவர்களுக்கு பேசிக்கொள்கின்றனர். இரவு நேரம் என்பதால் காரின் உள்ளே யாரும் சிக்கியிருந்தார்களா என்று தெரியவில்லை. கோவை மட்டுமின்றி திருப்பூரிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டத்திலும் இடி மற்றும் மின்னலுடன் நள்ளிரவில் கனமழை கொட்டி தீர்த்தது.
தென்காசி மாவட்டத்தில் மதியம் 2 மணியில் இருந்து 3 மணி வரை மழை விடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடையம், ஆலங்குளம், பாபநாசம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகள் கனமழை கொட்டி தீர்த்தது. மீண்டும் இரவு நேரத்திலும் ஒருசில இடங்களில் மழை தொடர்ந்தது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. குற்றாலம் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே, கோவையில் நாளையும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications