பெங்களூரில் போக்கு காட்டும் வானிலை.. இரவிலும் விடாது வெளுத்த மழையால் தத்தளித்த முக்கிய பகுதிகள்
பெங்களூர்: பெங்களூரில் இன்று மாலை முதல் கனமழை பெய்தது. குறிப்பாக வடக்கு பெங்களூர் பகுதியில் பெய்த பேய் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இரவு நேர நிலவரப்படி சவுடேஸ்வரி வார்டு பகுதியில் கிட்டத்தட்ட 14 செ.மீ மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிரட்ட தொடங்கியிருக்கும் நிலையில், கர்நாடகாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மழை வெளுத்து வாங்கிய நிலையில், திங்கள் கிழமை மழை சற்று ஓய்ந்ததது. மதியம் வரை பெரிதாக மழை பெய்யவில்லை. இத்தனைக்கும் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

ஆனால் வெயில் அடித்து கொண்டு இருந்ததால் வானிலை கணிப்பு துல்லியமானதாக இல்லை என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால், மதியத்திற்கு பிறகு திடீரென வானிலை மாறியது. பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. வெளுத்து வாங்கிய மழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக வடக்கு கர்நாடக பகுதிகளில் மிக கனமழை பெய்தது.
மாலை நேரத்தில் பெய்த மழை இரவில் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆர்வலர்கள் கணித்து இருந்தனர். கனமழையால் ஐடி தலைநகரான பெங்களூரில் கடந்த நில நாட்களாகவே மக்களின் இயல்பு நிலை பாதிகப்பட்டு வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். பெங்களூரில் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், தண்ணீரும் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திங்கள் கிழமை மதியத்திற்கு மேல் வடக்கு பெங்களூரில் மிக கனமழை பெய்ததால், நெட்டிசன்கள் பலரும் இதுவரை இப்படி ஒருமழையை நாங்கள் பார்த்தது இல்லை என பதிவிட்டதை காண முடிந்தது. வடக்கு பெங்களூரில் மேகக்கூட்டங்கள் திரண்டு நிற்கின்றன. மிக மிக கனமழை மேற்கு மற்றும் வடக்கு பெங்களூரில் பெய்யும். அடுத்த 1-2 மணி நேரத்திற்கு பயணங்களை தவிர்த்துவிடுங்கள். ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்வதற்கு வாய்ப்பு உள்ளது" என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டு இருந்தார்.
வடக்கு பெங்களூரில் திடீரென கொட்டிய பேய் மழையால், அலுவலகம் சென்றவர்கள் வீடு திரும்பும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவுட்டர் ரிங் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணபட்டது. முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றதால் இரு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.
இரவு 10 மணிக்கு பிறகு மீண்டும் வடக்கு பெங்களூரில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சவுடேச்வரி வார்டு பகுதியில் கிட்டத்தட்ட 14 செ.மீ மழை பெய்தது. வித்யாரண்புரா பகுதியிலும் 10 செ.மீட்டர் மழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கி கிடந்தது.












Click it and Unblock the Notifications