300 ஆண்டுகளில் இல்லாத மழை.. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
விழுப்புரம்: வங்கக்கடலில் உருவாகியிருந்த ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், மழையை நிறுத்தவில்லை. குறிப்பாக விழுப்புரம் தொடங்கி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழையை கொட்டி தீர்த்திருக்கிறது. இதன் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது. வெள்ளம் காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக புயல் கரையை கடக்கும் பகுதியில் பலத்த மழையும், காற்றும் சேர்ந்து கடுமையான பாதிப்புகளை உருவாக்கும். ஆனால் இந்த முறை, கரையை கடந்த இடத்தில் மட்டுமல்லாது, உள் மாவட்டங்களிலும் பலத்த மழையை ஃபெஞ்சல் புயல் கொடுத்திருக்கிறது. புயலிலிருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த இது, அரபிக்கடலை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதன் நகரும் வேகம் குறைவாக இருந்ததால் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மழையை கொட்டி தீர்த்திருக்கிறது.

நேற்றைய நிலவரப்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 51 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக 21 செ.மீ அளவை தாண்டி பெய்தால் ரெட் அலர்ட் விடுக்கப்படும். அப்படியெனில் விழுப்புரத்தில் பெய்த மழை எந்த அளவுக்கு தீவிரமாக இருந்திருக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள். கனமழை காரணமாக சென்னை-திருச்சி ரயில் பாதையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில் இரண்டும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
விக்கிரவாண்டி பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் தேங்கி உள்ளதால் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் திருப்பி விடப்பட்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி, தரும்புரி, அரூர், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கயிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்தகங்கரையில் 50.3 செ.மீ, அரூரில் 33.1 செ.மீ, சேலம் ஏற்காடு பகுதியில் 23.9 செ.மீ, திருவண்ணாமலையின் ஜமானமரத்தூரில் 22.3 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் பதிவான மழை கடந்த 300 ஆண்டுகளில் பெய்த மழையைவிட அதிகம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்டேட்: தேசிய நெடுஞ்சாலையில் ஒருவழிப்பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. விழுப்புரத்தின் அரசூர் எனும் பகுதியில் நெடுஞ்சாலையை மூழ்கடித்து வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது.
ரயில்கள்: தென் மாவட்டங்களிலிருந்து எழும்பூர் வரும் ரயில்கள் தற்போது அரக்கோணம் வழியாகதிருப்பி விடப்பட்டிருக்கின்றன. வெள்ளம் காரணமாக மக்கள் இழப்பீடு கோரி வருகின்றனர். எனவே வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு நியமித்திருக்கிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அமைச்சர் சு.முத்துசாமியும், தருமபுரி மாவடத்திற்கு அமைச்சர் ராஜேந்திரனும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications