பெங்களூரை மிரட்டும் கனமழை! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. ஐடி கம்பெனிகளுக்கு WFH கொடுக்க அறிவுறுத்தல்
பெங்களூர்: சென்னை மட்டுமின்றி கர்நாடகாவின் பெங்களூரிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி இன்று பெங்களூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஐடி நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. இன்றும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் மழை பெய்து வருகிறது. பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. பேகூர், பொம்மனஹள்ளி, பன்னரகட்டா ரோடு, ஜெயநகர், லால்பாக், மெஜஸ்டிக், எம்.ஜி.ரோடு, , சில்க் போர்டு, எலெக்ட்ரானிக் சிட்டி, கெம்பாபுரா, சிட்டி மார்க்கெட், ஹெப்பால், எலகங்கா, மகாதேவபுரா, வெளிவட்ட சாலை, ஒயிட்பீல்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
வெளுத்து வாங்கிய மழையால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்,வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறும் பெங்களூரில் இந்த மழை கூடுதல் டிராபிக் நெரிசலை ஏற்படுத்தியது. பெங்களூரில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பெங்களூர் மட்டும் இன்றி பெங்களூர் புறநகர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூர், ஹாசன், கோலார்,
மண்டியா, ராமநகர், சிவமொக்கா, துமகூரு ,உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய இடங்களிலும் மிக கனமழை பெய்யும். தார்வார், உப்பள்ளி, ஹாவேரி, கதக் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 18 ஆம் தேதி முதல் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்றும் பெங்களூரில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மழலையர் பள்ளிகள், 1-ம் வகுப்பு முதல் பி.யூ.சி. இறுதியாண்டு வரையிலான வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வொர்க் பிரம் ஹோம் வசதியை ஐடி நிறுவனங்கள் அளிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications