ஒடிசா டூ கேரளா.. இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஜில் அப்டேட்
சென்னை: திங்கட்கிழமை முதல் ஒடிசா, கடலோர ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் கனமழை முதல் மிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் அதிக அளவு வறட்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், செப்டம்பர் மாத தொடக்கமான இன்று முதல் ஒடிசா, கடலோர ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் கனமழை முதல் மிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.வழக்கமாக தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது மே மாதம் இறுதியிலும், ஜூன் மாதம் 1ம் தேதியும் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது.

இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும். அதனால்தான் எப்போதும் கேரளா செழிப்பாகவும், பசுமையாகவும் இருக்கிறது. ஏராளமான சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கிறது.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. மாவட்ட வாரியாக இடுக்கியில் இயல்பை விட 60 சதவீதத்திற்கும் குறைவாகவும். வயநாட்டில் 55 சதவீதமும், கோழிக்கோடு மாவட்டத்தில் 53 சதவீதமும் மழை குறைந்துள்ளது.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக இயல்பைவிட வெப்பம் அதிகரித்திருக்கிறது. கேரளா ஜில்லென இருக்கும் என நம்பி வந்த சுற்றுலா பயணிகளை இந்த வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அதாவது, "மழை குறைவு காரணமாக வறட்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு உள்பட ஒன்பது மாவட்டங்களில் இன்று வெப்பநிலை மூன்று முதல் ஐந்து டிகிரி வரை அதிகரிக்கும்" என்று கூறியுள்ளது.

பருவமழை குறைந்ததன் காரணமாக அணைகளுக்கான நீர் வரத்தும் குறைந்திருக்கிறது. கேரள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அணைகளில், 37 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. எனவே மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் பரவலாக மின்வெட்டாக எதிரொலித்திருக்கிறது. கடுமையான வெயில் மற்றும் மின்வெட்டு காரணமாக கேரள மக்கள் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர்.
அடுத்த இரண்டு மாதங்களுக்கும் கேரளாவில் பருவமழை குறைவாகதான் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. அதேபோல கர்நாடகாவிலும் பருவமழை பொய்த்துப்போனதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து குறைந்திருக்கிறது. எனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் மிகவும் வறட்சியான மாதமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாத தொடக்கமான இன்று முதல் ஒடிசா, கடலோர ஆந்திரா, தெலுங்கானா, கேரளாவில் கனமழை முதல் மிக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த மழை அடுத்த இரண்டு நாட்களுக்கு தீவிரமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதே தமிழ்நாட்டை பொறுத்த அளவில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதியதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி அதற்கடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications