அடுத்த 3 மணி நேரம்.. இடி, மின்னலுடன் 14 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! ராமநாதபுரம் தான் டார்கெட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்தது. இதேபோன்று நெல்லை, தென்காசி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று இரவு வரை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, குமரி ஆகிய 13 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று வானிலை மையம் கூறியுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21 ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு நாட்களில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-11-2024 முதல் 24-11-2024 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25 ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். நாளையும் சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications