சுழட்டி சுழட்டி 40 கிமீ வேகத்தில் வரும் சூறாவளி... தமிழகத்தின் 4 மாவட்டங்களிலும் செம்ம மழை இருக்கு
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்தவகையில், தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.. இதன் காரணமாக வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை நேற்றைய தினம் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

18 மாவட்டங்களில் மழை
மேலும், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை நேற்றிரவு 10 மணி வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று மீண்டும் ஒரு செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில், "தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கடலூர், மயிலாடுதுறை மழை
இவை காரணமாக தமிழகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை சனிக்கிழமை முதல் 17-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்க கடல் சூறாவளி காற்று
தென்மேற்கு - மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி..மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
மழையின் அளவு
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரையில் 13 செ.மீ., தல்லாகுளம், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் தலா 12 செ.மீ. திருச்சி மாவட்டம் துறையூர், கரூர் மாவட்டம் கடவூரில் 9 செ.மீ., திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, பொன்மலை, மதுரை மாவட்டம் புலிப்பட்டி, பெரியபட்டியில் தலா 8 செ.மீ, பெரம்பலூரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications