சென்னை கிளைமேட் நாளை எப்படி இருக்கும்? வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
சென்னை: வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் நல்ல மழை பெய்தது. இதனால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. அதன் பிறகு கனமழை தென் தமிழகம் பக்கம் திரும்பியது. விடாமல் கொட்டிய கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

இப்போது தான் மழை சற்று ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று டிச. 25 முதல் டிச. 27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் டிச. 28ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல டிச. 29 முதல் டிச. 31 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் மாதம் விடைபெறும் தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என்று தெரிகிறது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாத இறுதியில் முடிவடையும். ஆனால் இந்த முறை ஜனவரி முதல் வாரம் வரை தொடரும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படியே நாளையும் ஒருசில இடங்களில் லேசனா மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை நாளை செவ்வாய்க்கிழமை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு சென்ன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications