ஒரு நாள் மழைக்கே சந்திரமுகியாக மாறிய ஹைதராபாத்.. சாலைகளில் நான்கு அடி வரை பாய்ந்த வெள்ளநீர்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று மிகப்பெரிய அளவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் பாய்ந்தோடியது. நகரின் முக்கிய பகுதிளில் ஒன்றாக டோலிசௌக்கி பகுதியில் 3 முதல் நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் முடங்கி நின்றார்கள். கடைகளும் பாதிக்கப்பட்டன .
ஹைதராபாத்தில் இன்று (திங்கள்கிழமை) கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையான பாதிக்கப்பட்டது. சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியபடி இருந்ததால், வாரத்தின் முதல் நாளான இன்று அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்ல முடியாமல் பயணிகள் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தார்கள். சென்னை எப்படி மழையில் சிக்கி சின்னாபின்னமாகுமோ, அதுபோல் இன்று ஹைதராபாத் கனமழை மற்றும் வெள்ளநீர் உடனே வெளியேறி செல்ல வழியில்லாமல் பெரும் சிரமங்களை சந்தித்தது.

ஹைதராபாத்தில் இன்று மாலையில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டோலிசௌக்கி, ஷேக்பேட், ஜூப்லி ஹில்ஸ் செக்போஸ்ட், மசாப் டேங்க், மெஹ்திப்பட்டினம், நானல் நகர், மைத்ரிவனம், எஸ்ஆர் நகர் மற்றும் பேகம்பேட் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீரால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஹைதராபாத் மற்றும் சைபராபாத் போக்குவரத்துக் போலீசார் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பெரும் சிரமங்களை சந்தித்தார்கள். அதே நேரத்தில் ஹைதராபாத் மாநகராட்சி ஊழியர்கள் (ஜிஹெச்எம்சி) தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் அடைப்புகளை எடுத்துவிட்டு சரி செய்து பிரச்சனைகளை சரி செய்தனர். இரவு வரை கடும் நெரிசலுக்கு நடுவில் நீண்ட நேரத்திற்கு பிறகே மக்கள் வீடுகளை அடைந்தனர்.

ஹைதராபாத்தில் இன்று பெய்த கனமழையால் செகந்திராபாத் மற்றும் ஷேக்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் பிற பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. ஷேக்பேட்டையில், சென்ட்ரல் மீடியனின் இருபுறமும் மழை நீர் தேங்கி நின்றதால், பாதசாரிகள் இடுப்பளவு நீரில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
இதேபோல் சாலைகளில் சிக்கிய காரை கிரேன் மூலம் தூக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டார்கள். இந்த திடீர் கனமழையால் பூக்கள், பழங்கள் விற்கும் பல வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை நாளாக இருந்ததால் ஹைதராபாத் ஓரளவு தப்பித்தது. 'ரக்ஷா பந்தன்' விழாவை முன்னிட்டு இன்று விடுமுறை என்பதால், பலரும் உறவினர் வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தநிலையில், மழையில் சிக்கி மக்கள் பரிதவித்து போனார்கள்.












Click it and Unblock the Notifications