பள்ளிக்கரணை மேப்பை பாருங்க! எப்ப மழை பெய்தாலும் தண்ணீர் தேங்குவது ஏன்? தூர்வாரி என்ன பிரயோஜனம்?
சென்னை: எப்போது மழை பெய்தாலும் பள்ளிக்கரணை பகுதி நீரில் மூழ்குவது எதனால் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து Tamil Nadu Geography எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கரணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் 231 சதுர கிலோமீட்டர் கடல் மட்டத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. கிழக்கு பகுதியில் எல்லைகளில் நிலப்பரப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியில் தண்ணீர் போவதற்கு ஒரே ஒரு கால்வாய்தான் உள்ளது அது ஒக்கியம்மேடு ஆகும்.

இதனால் கனமழை பெய்யும் காலத்தில் வடதமிழகத்தில் பெரிய தண்ணீர் தேங்கும் பகுதியாக பள்ளிக்கரணை உருவாகிறது. இந்த பள்ளிக்கரணை பள்ளத்தாக்கு பகுதிகளை ஒட்டி மனிதர்கள் வாழும் பகுதி உள்ளது. இந்த பகுதி தமிழகத்தில் வட கடலோர பகுதியில் அதிக மழையை பெறும் பகுதியாகும். ஒக்கியம் மடவு என்ற ஒரே ஒரு கால்வாய் உள்ளது. பக்கிம்காம் கால்வாயை மழை நீர் அடைவதில் தாமதம் ஏற்படுகிறது.
மடிப்பாக்கம்- ரேடியல் சாலை, பெரும்பாக்கம் ஆகிய இரு பெரிய நீரோடைகள் பள்ளிக்கரணையுடன் இணைகின்றன. பெருமழை வெள்ள காலங்களில் ஒக்கியம் மடவு- பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக அதிக நீரை வெளியேற்ற முடியாத சூழல் உள்ளது. இதனால் மழை நீர் தேங்கி பள்ளிக்கரணை அணை போல் காட்சி அளிக்கிறது.
பள்ளிக்கரணையின் 231 சதுர கி.மீ. பரப்பளவில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட அதிக மக்கள் தொகை உள்ளது. அவர்களை வேறு இடங்களுக்கு அனுப்புவது என்பது கனவில்தான் நடக்கும். பொறியியல் துறை சார்ந்த தீர்வு தேவைப்படுகிறது. அவை புதிய ஷட்டர்களை அமைப்பதாக இருக்கலாம், செயற்கை கால்வாய்களை உருவாக்குவதாக இருக்கலாம். அடையாறுக்கு மழைநீரை திருப்பி விடுவதாகவும் இருக்கலாம்.
ஒக்கியம் மடவிலிருந்து கடற்கரைக்கு ஒரு கால்வாயை கட்டுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நிறைய பேரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். பள்ளிக்கரணையை தூர்வாருதல் மட்டும் போதாது. பக்கிங்ஹாம் கால்வாய் ஏரிகளுடன் இணையும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. சென்னையில் நீர் வெளியேற வழியின்றி நிறைய ஏரிகள் உள்ளன. மேடவாக்கம் பகுதியிலும் இதனால்தான் வெள்ள நீர் தேங்கியது. இவ்வாறு அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் மழையின் போது பள்ளிக்கரணையை சுற்றியுள்ள நாராயணபுரம் ஏரியானது உடைந்துவிட்ட நிலையில் ஊருக்குள் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்துவிட்டது. இந்த தண்ணீரில் மக்கள் தத்தளித்தனர். சதுப்பு நிலம் இருந்தாலும் பள்ளிக்கரணை எப்போது பார்த்தாலும் தண்ணீரில் மூழ்குவது ஏன்? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவது வாடிக்கைதான். அதற்கு தீர்வு என்றால் புதிய கால்வாய் கட்டுவதுதான் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications