அடுத்த ‘புயல்’? அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய கன மழையால் இந்த நான்கு மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் சொல்ல முடியாத அளவிற்கு துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு விலகி ஆந்திரா நோக்கிச் சென்று நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடந்த நிலையிலும், அது சென்னையில் ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பலவற்றில் இன்னும் மழைநீர் வடியாமல் உள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும், அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகத்தில் கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரிய் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருக்கும், அரபிக் கடல் பகுதியில் காற்றத்தழுத்த தாழ்வுநிலை இந்திய கடற்பகுதியை நோக்கி வரலாம். ஆனால், அதனால் சென்னைக்கு பாதிப்பு ஒன்றுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications