கர்நாடகாவுக்கு ‛ரெட் அலர்ட்’.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. பெங்களூர் நிலவரம் என்ன?
பெங்களூர்: கர்நாடகாவில் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்றும், நாளையும் கர்நாடகாவின் சில மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு பெங்களூரில் என்ன மாதிரியான வானிலை நிலவும்? என்பது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட கர்நாடகா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இருப்பினும் பெங்களூரை எடுத்து கொண்டால் கனமழை என்பது இல்லை. பெங்களூர் புறநகர் மாவட்டத்தில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் சில மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பெங்களூரை எடுத்து கொண்டால் இன்றும், நாளையும் வானம் மேககூட்டத்துடன் காணப்படும். அதன்பிறகு வரும் 30ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி சில இடங்களில் மழை பெய்யும். ஆகஸ்ட் 30ம் தேதி பெங்களூரில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. இந்த மழை செப்டம்பர் 1ம் தேதி வரை தொடரும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
கடலோர மாவட்டங்களாக உள்ள உத்தர கன்னடா, தட்சின கன்னடா, உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை உடுப்பி, தட்சின கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கர்நாடகா மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் சார்பில், ‛‛கடலோர கர்நாடகா மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யலாம். உத்தர கன்னடா மாவட்டத்தில் அதி தீவிர கனமழை பெய்யலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வடகர்நாடகா மாவட்டங்களை பொறுத்தவரை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். பீதர், கலபுரிக, யாதகிரி, விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மேலும் கர்நாடகா உள்மாவட்டங்களை எடுத்து கொண்டால் சிக்கமகளூர், சிவமொக்கா, குடகு, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளது
இதுதவிர கர்நாடகா உள்மாவட்டங்களான பெங்களூர் புறநகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, தாவணகெரோ, கோலார், மண்டியா, மைசூர், ராமநகர், துமகூரு, விஜயநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை சில இடங்களில் பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாகல்கோட்டை, தார்வார், கதக், ஹாவேரி, கொப்பல், ராய்ச்சூர் மாவட்டங்களில் பலத்த காற்று வீசலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications