சென்னை உட்பட 33 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: சென்னையில் பிற்பகல் முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 33 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி நேற்று வரை சராசரியாக 234.9 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இது இந்த காலத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவைவிட இரண்டு சதவீதம் குறைவாகும். ஆனால் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் மழை சராசரி அளவைவிட கூடுதலாக பெய்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 295%, திருவள்ளூரில் 33%, தென்காசியில் 76%, மதுரையில் 46%, சென்னையில் 20%, கோயம்புத்தூரில் 45% என மழை கூடுதலாக பெய்திருக்கிறது. மறுபுறம் செங்கல்பட்டு, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், திருப்பூர், தூத்துக்குடி, திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மழை இயல்பை விட குறைவாக செய்திருக்கிறது.
முன்னதாக இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிவிப்பில், "தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்று, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்.12ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்.13 முதல் 16 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று முதல் 12ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (10-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (11-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications