மயிலாப்பூரில் வீட்டின் சுற்றுச்சுவரை மூழ்கடித்த வெள்ளம்! தண்ணீரில் தத்தளிக்கும் பேஸ்மெண்ட் வீடுகள்!
சென்னை: சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் தெருவில் வீட்டின் சுற்றுச்சுவரை மூழ்கடித்தவாறு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக மயிலாப்பூர் பிருந்தாவன் தெரு முழுவதும் பேஸ்மெண்ட் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் மின்சாதனப் பொருட்கள், கார்கள், முக்கிய சான்றிதழ்கள் என எல்லாவற்றையும் புயல் மழையிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கின்றனர் அப்பகுதி மக்கள். இன்னும் கொஞ்ச நேரம் இடைவிடாது மழை பெய்தால் முதல் தளத்தில் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.

வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் 1,000 மோட்டார் பம்பு செட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தும் பல இடங்களில் மோட்டார் பம்பு செட்டுகளையே வெள்ளம் மூழ்கடித்தாவாறு சீறி பாய்ந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் மோட்டார் பம்பு செட்டு மூலம் வெளியேற்றப்படும் நீரானது ஆறு மூலம் கடலில் கலக்கவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வெள்ளநீரை கடல் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இதை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனும் உறுதி செய்துள்ளார்.
அரசு இயந்திரம் என்ன தான் முழுவீச்சில் பணியாற்றினாலும் மிக் ஜாம் புயலில் தாக்கம் என்பது வரலாறு காணாத ஒன்றாக அமைந்துவிட்டது. இதனால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவுமே இன்று ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனிடையே சென்னையில் மட்டும் 3 லட்சம் பேருக்கு அரசு சார்பில் இன்று உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு வரை எப்படியும் மழை தொடரும் என்பதால் சென்னை மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமைக்கழகமானது வெள்ளத்தில் மிதக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளின் பீடம் வரை தண்ணீரின் அளவு உயர்ந்துவிட்டது. இனியும் கூடுதலாக உயரக்கூடும். சென்னை புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில் தான் வெள்ளம் என்றால் மயிலாப்பூர், ராயப்பேட்டை போன்ற நகரின் முக்கிய பகுதிகளும் தண்ணீரில் தத்தளிக்கின்றன.












Click it and Unblock the Notifications