காலை முதல் சென்னையில் மழை இல்லையா? இப்போ உஷாரா இருங்க.. 14 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் வரும் 5ம் தேதி வடதமிழகத்தை ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், "சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 780 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நிலை கொண்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, டிச.3ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும்.

பின் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிச.5ம் தேதி புயலாக கரையை கடக்க கூடும். இதனால் டிசம்பர் 3ம் தேதி தொடங்கி இரு தினங்களுக்கு சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. டிச.3ம் தேதி திருவள்ளூர் சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வடக்கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
டிச.4ம் தேதியை பொருத்த அளவில் சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். பலத்த காற்றைப் பொறுத்த அளவில் டிச. 3ம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரை வடக்கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். சில நேரங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
இதே டிச.4ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 80 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் சில நேரங்களில் 70 கி.மீ வேகத்திலும் காற்று வீசும்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தை பொறுத்த அளவில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், அரியலூர் மற்றும் கன்னியாகுமரி என 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் நீர் தேங்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications