மதுரை டூ குமரி வரை.. இடி மின்னலுடன் கொட்டப்போகும் மழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அந்த வகையில் இன்று 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பல இடங்களில் இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக 7 இடங்களில் 40.0° செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகியிருந்தது.

அதாவது ஈரோட்டில் 42.0° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4° செல்சியஸ், தர்மபுரியில் 41.2° செல்சியஸ், வேலூரில் 41.1° செல்சியஸ், திருத்தணியில் 40.6° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.2° செல்சியஸ் மற்றும் சேலத்தில் 40.1° செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° - 40° செல்சியஸ் பதிவாகியிருந்தது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், அடுத்த ஏழு தினங்களுக்கு தென் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அடுத்த 1 மணி நேரத்தில், அதாவது இரவு 7 மணி வரை தமிகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்றும், இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்றும் எச்சரித்துள்ளது.
முன்னதாக இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், “இன்று முதல் மே 1ம் தேதி வரை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே 2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே 3 முதல் 5ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி மே 3ம் தேதி வரை அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இன்று தொடங்கி அடுத்த 3 தினங்களுக்கு, வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மே 2 மற்றும் 3ம் தேதி வரை 2 தினங்களுக்கு ஏனைய தமிழக வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் என வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் வருசில இடங்களில் 39-43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37°-39° செல்சியஸ் இருக்கக்கூடும். காற்றின் ஈரப்பதத்தை பொறுத்த அளவில், தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications