சென்னையில் தாழ்வான பகுதிகளுக்கு எச்சரிக்கை! அடுத்த 3 மணிநேரம் முக்கியம்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையை போல வடகிழக்கு பருவமழையும் ஏறத்தாழ இயல்பான அளவில் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார்.

தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுதான் தற்போது மழைக்கான காரணமாக இருக்கிறது. எனவே அடுத்த இரண்டு தினங்களில் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
"நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என்றும், மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications