சென்னைக்கு கனமழை இருக்கா? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்.. நாளைய நிலவரம் இதுதான்
சென்னை: சென்னையில் இன்று லேசான மழையும், நாளை காலை அல்லது மதியத்தில் இருந்து மழை படிப்படியாக குறையும். தற்போதைய காற்றழுத்த தாழ்வு நிலையால் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும்.

அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று கணித்து கூறியது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக இன்று வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியது.
அதன்படி இன்று மதியம் முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவிலும் கூட சென்னை, புறநகர் மற்றும் அதனையொட்டிய சில இடங்களில் மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் இன்று லேசான மழையும், நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என்று தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛நகர் (சென்னை) முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. அடுத்ததாக மிதமான மழையை தரும் மேகங்கள் நகரை நோக்கி நகர்கிறது. இதனால் லேசான மழை பெய்யும். அதேவேளையில் நாளை காலை/மதியத்தில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை விட்டு நகரும். இதனால் மழை என்பது குறையும். எனவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை''என்று கூறியுள்ளார்.
மேலும் சென்னையை பொறுத்தவரை இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அதிகபட்சமாக ராயபுரத்தில் 51.6 மிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக திருவொற்றியூரில் 49.8 மிமீ, தண்டையார்பேட்டையில் 48.3 மீமீ, கத்திவாக்கம் 44.1 மிமீ, டிவிகே நகர் 43.2 மிமீ, அண்ணா நகர் 41.7 மிமீ மழை பதிவாகி இருந்தது.
அதேபோல் கோடம்பாக்கத்தில் 39 மிமீ, ஐஸ் ஹவுசில் 36.3 மிமீ, அடையாரில் 34.5 மிமீ, பெருங்குடியில் 32.7 மிமீ, ஆலந்தூரில் 32.4 மிமீ, மீனம்பாக்கம் 6ஏ கேட் 28.8 மிமீ, அடையார் எக்கோ பார்க் 28.8 மிமீ, தேனாம்பேட்டையில் 28.5 மீமீ, மேடவாக்கத்தில் 28.2 மிமீ மழை என்பது பதிவாகி உள்ளது. இந்நிலையில் தான் நாளை முதல் சென்னையில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீபன் ஜான் கணித்துள்ளார்.












Click it and Unblock the Notifications