விடிந்தால் தீபாவளி.. தமிழகத்தில் நாளை மழை வருமா? வராதா? வானிலை மையம் சொன்ன மேஜர் மேட்டர்! என்ன அது?
சென்னை: தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை அணிந்து பட்டாசு வெடிக்க மக்கள் தயாராகி வரும் நிலையில் நாளை தமிழகத்தில் மழை பெய்யுமா? இல்லையா? என்பது குறித்த முக்கிய தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர், வெளிமாநிலங்களில் பணி செய்யும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். கார், பஸ், ரயில்களில் அவர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.

விடிந்தால் தீபாவளி என்ற நிலையில் இன்றும் கூட சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் தீபாவளிக்கான இறுதிக்கட்ட ஷாப்பிங்கில் மக்கள் ஆர்வம் காட்டினர். தென்தமிழக மாவட்டங்களில் மழை பெய்தாலும் கூட மக்கள் அதனை பொருட்படுத்தாமல் புத்தாடை, பட்டாசுகள் வாங்கினர். தமிழகத்தின் பிற இடங்களிலும் இன்று மக்கள் தீபாவளிக்கான ஷாப்பிங்கை மகிழ்ச்சியுடன் மேற்கொண்டனர்.
இந்நிலையில் தான் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல் வடதமிழகத்தில் சில இடங்களில் மழை என்பது பெய்து வருகிறது. இதற்கிடையே தான் தீபாவளி தினமான நாளையும் மழை பெய்யுமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
இதற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விடையளித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக 12ம் தேதி (தீபாவளி தினம்) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி கனமழை பெய்தது. ஆனால் நாளைய தினம் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதால் இது தீபாவளிக்கு இடையூறு செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 31-32 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தீபாவளி முடிந்த பிறகு வரும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், இது நவம்பர் 16ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழகத்தில் 14, 15 ஆகிய நாட்களில் கனமழை வெளுத்து வாங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications