வரப்போகுது வடகிழக்கு மழை.. தாம்பரம் வரதராஜபுரம் தப்புமா? அந்த பாலம் ரொம்ப முக்கியம் சார்!
சென்னை: வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க போகுது என்றாலே சென்னையின் புறநகர் பகுதிகளில் கலக்கம் ஏற்படும். 2015க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் பயத்தையே ஏற்படுத்துகின்றன. சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் வரதராஜபுரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், ஆதனூர் பகுதிகளில் 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது.
அடையாறு ஆற்றங்கரையை ஒட்டியுள்ள இந்த பகுதிகளில் 2015ம் ஆண்டு பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலரும் உயிரிழந்தனர்.பலர் வீடுகளை இழந்தனர். தண்ணீருக்காவும், உணவுக்காவும் மாடிகளில் நின்று கண்ணீரோடு தவித்தனர். 2015ல் ஏற்பட்ட மோசமான மழையும் அதனால் செம்பரப்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட வெள்ளமும் இனி எப்போதும் வந்துவிடக்கூடாது என்று சென்னை மக்கள் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டு மழையின்போதும் அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள வரதராஜபுரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், ஆதனூர் பகுதிகள் மழை நீரால் சூழப்படுவதும் தொடர்கிறது.நல்வாய்ப்பாக கடந்த ஆண்டு போதிய அளவு வடகிழக்கு பருவ மழை பெய்யவில்லை.. அதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டுமே பாதிப்பு இல்லை. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டான 2021ம் ஆண்டும், அதற்கு முந்தைய 2020, 2019 ஆகிய ஆண்டுகளும் பாதிப்புகள் இருந்தன.
இந்நிலையில் தாம்பரம் வரதராஜபுரம் பகுதியில் வெள்ளப்பாதிப்புக்கு தீர்வு ஏற்பட 2016ம் ஆண்டே பல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அடையாற்றை ஒட்டி இருந்த பல நீர் நிலை ஆக்கிரிமிப்புகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டன. ஆனாலும் முழுமையாக நகரமயமாகி இருந்த காரணத்தால் கரையோரத்தில் மட்டுமே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதேநேரம் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்றால்
அடையாறு ஆற்றில் கரை உடைப்பு ஏற்படும் இடங்களில் தடுப்புச்சுவர்கள் கண்டிப்பாக அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் வால்வு ஷட்டர் அமைக்க வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல் வரதராஜபுரத்தில் ராயப்பா நகர் வழியாக மூடுகால்வாய் பணிகள் நடக்கின்றன. 400 அடி வெளிவட்டச்சாலையில் மூடுகால்வாய் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த பணிகள் முடிந்தால் மட்டுமே ராயப்பா நகர், அஷ்டலட்சுமி நகர், புவனேசுவரி நகர், சாந்தி நிகேதன், குமரன் நகர் பகுதிகளில் வெள்ளம் வராது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

அதேபோல் அடையாறு ஆற்றின் மேல், 400 அடி வெளிவட்ட சாலையில், ராயப்பா நகரில் உள்ள மேம்பாலம் குறைந்த அகலத்தில் உள்ளது. இந்த மேம்பாலம் குறைவான அகலத்தில் இருந்ததால், 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வரதராஜபுரம் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியன. அதனால் அந்த உள்ள பாலத்துக்கு அருகிலேயே மற்றொரு பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் மக்களிடையே உள்ளது.
தற்போது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க ரூ.70 கோடியில் கட்டமைப்புபணிகள் நடந்து வருகின்றன கரைகளை பலப்படுத்துதல், தாங்கு சுவர் அமைத்தல், பாதாள மூடு கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளை நீர்வளத்துறை விரைவு படுத்தி வருகிறது.. தற்போது வரை 80 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளது. முன்னதாக அடையாற்றில் பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் 10 ஆயிரம் கனஅடி நீர்வெளியேற்றும் வகையில் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.
இப்போது 70 கோடியில் மேற்கொள்ளப்படம் கட்டமைப்பு வசதிகள் முடிந்தால் ஒரே நேரத்தில் அடையாற்றில 15 ஆயிரம் கனஅடி மழைநீரை வெளியேற்ற முடியும் என்று அதிகாரிகள் கூறினர். இந்த பணிகளை செப்டம்பர் மாதம் முடிவதற்கு முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். அதே நேரம் பணிகள் முடிந்தாலும் வரதாரஜபுரம் பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்றே சொல்கிறார்கள். எனினும் விரைவாக சரியாகிவிடும் என்றும் முன்பு போல் பல நாட்கள் மழைநீர் தேங்காது என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications