100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்! பாதிப்பிலிருந்து தப்பிக்க.. இதையெல்லாம் செய்யுங்க!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வெயில் பாதிப்பிலிருந்து தப்பிக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது தான்.
தமிகழத்தில் வழக்கமாக மார்ச் இறுதியில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில் தொடங்கிவிட்டது. மார்ச் முழுவதும் வெயில் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தீவிரமாகதான் இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் வெயில் இயல் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.16 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் பதிவாகியுள்ளது. அது இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் அதிகம். பரமத்திக்கு அடுத்து வேலூர் மற்றும் திருச்சியில் 105.98, ஈரோடு, மதுரை விமான நிலையத்தில் 105.8, திருத்தணி, சேலம், திருப்பத்தூரில் தலா 104.36, 104.18, 104 டிகிரி வெயில் வாட்டியிருக்கிறது.
அதேபோல இன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என்பதால், அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. குறிப்பாக சொல்வதெனில் அடுத்த 5 நாட்களுக்கு வட உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், தமிழகத்தின் பிற உள் மாவட்டங்களிலும் இயல்பாக பதிவாகும் வெப்பநிலையை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும், புதுச்சேரி காரைக்காலில் வெப்ப நிலையை பொறுத்த அளவில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல உள் மாவட்டங்களில் மதிய வேளைகளில் ஈரப்பதம் 30-50 சதவிகிதமாகதான் இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. சுருக்கமாக சொல்வதெனில் நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது.
எனவே இந்த கோடை காலங்களில் செய்ய வேண்டியது, செய்யக்கூடாது எது? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
செய்ய வேண்டியவை:
- தாகம் எடுக்காத பட்சத்திலும் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.
- அதிக உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளை மதிய நேரங்களில் செய்வதைத் தவிர்க்கவும்.
- வெளியில் செல்லும்போது தண்ணீரைக் கொண்டு செல்லவும்.
- வெளியில் வேலை பார்ப்பவராக இருந்தால் குடையோ அல்லது தொப்பியோ உடன் கொண்டு செல்ல வேண்டும்.
- உடல் சோர்வுற்றாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும்.
- மோர், எலுமிச்சை தண்ணீர் போன்ற வீட்டில் செய்யும் பானங்களைப் பருக வேண்டும்.
- வளர்ப்புப் பிராணிகளை நிழலிலே வைக்க வேண்டும். அதிக தண்ணீர் கொடுக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை:
- மதிய நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும் (12.00 PM -3.00 PM)
- வெளியில் வேலை செய்பவராக இருந்தால் கருப்பு நிறம் போன்ற அடர்த்தியான நிறம் கொண்ட உடைகளை அணிவதை தவிர்க்கவும்
- உடல் படபடப்பு, மயக்கம் போன்றவை ஏற்பட்டால் தொடர்ந்து வேலை செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டும்
- குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை குடிப்பதை தவிர்க்கவும்.
- புரதச்சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
- நீர் சத்து நிரம்பிய பழங்களை தவிர்க்கக்கூடாது
- எண்ணெய்யில் வறுத்த நொறுக்கு தீனிகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்












Click it and Unblock the Notifications