4 மணி ஆயிடுச்சா.. வெள்ளச்சாமி பாட ஆரம்பிச்சிடுவானே.. தேனியில் இப்ப எப்படி இருக்கு தெரியுமா?
தேனி: தேனி பக்கம் தினமும் மாலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இன்று மாலையும் நல்ல மழை பெய்தது. தொடர் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கத்தை அப்படியே குறைத்துள்ளது கோடை மழை.. கடந்த 3 நாட்களாக சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கமும் ஓரளவுக்கு குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக நேற்று முன்தினம் தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 13 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. பெரியகுளம், மஞ்சளாறு, முல்லைப் பெரியாறு உள்பட தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

இதனிடையே தெற்கு கேரளா மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இன்று முதல் (சனிக்கிழமை) 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.
அதேபோல் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது. இதேபோல், நாளை மறுதினமும் (திங்கட்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

சென்னை வானிலை மையம் அறிவிப்பின்படியே கடந்த நான்கு நாட்களாக தினமும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் வரை தேனியில் அருவிகள் மற்றும் ஆறு வறண்டு கிடந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் அப்படியே கிளைமேட் வேறலெவலில் மாறி உள்ளது.
சின்ன சுருளி, சுருளி, சோத்துப்பாறை, கும்பக்கரை, சின்னாறு, கல்லாறு, முல்லை பெரியாறு, வைகை ஆறு, மஞ்சளாறு, கொட்டக்குடி ஆறு என தேனி மாவட்டத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் தண்ணீர் நிறைய செல்கிறது. வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளுவென மாறிக்கிடக்கிறது. தேனி பக்கம் சுற்றுலா செல்வோருக்கு இது அற்புதமான தருணம்..












Click it and Unblock the Notifications