கிடுகிடுவென நிரம்பும் கபினி, கேஆர்எஸ் அணை! வறண்டு கிடந்த ஒகேனக்கல்லுக்கு வந்த காவிரி!
ஒகேனக்கல்: தென் மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்து வருவதால் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த ஒகேனக்கல்லில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
பிரபல சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டதால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 4000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன் தினம் கபினி அணையிலிருந்து வினாடிக்கு 2,917 கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 546 கன அடி என இரு அணைகளில் இரு்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு மொத்தம் 3,463 கன அடியாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்ராம்பாளையம், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பெய்த மழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன் தினம் காலை 10 மணிக்கு வினாடிக்கு 1500 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர் வரத்து நேற்று மாலை 5 மணிக்கு 4554 கனஅடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது. ஏற்கெனவே வறண்டு கிடந்த ஒகேனக்கல்லின் மெயின் அருவி, மெயின் ஃபால்ஸ், சினி ஃபால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள 84 அடி உயரம் கொண்ட கபினியின் அணையின் நீர் மட்டம் 83 அடியை தொட்டுள்ளது.
இது போல் 124 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. இரு அணைகளில் இருந்தும் 4000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1,281 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று 1,465 கனஅடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 39.70 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 39.76 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூரில் நீர் இருப்பு 11.96 அடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications