கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அதே காட்சி.. முடிச்சூர் டூ வண்டலூரை மிரட்டிய மழைநீர்.. தவித்த தாம்பரம்
சென்னை: சென்னையில் பலத்த மழை பெய்து வரும்நிலையில், புறநகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.. குறிப்பாக. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, முடிச்சூர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மழை: மிகுந்த வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, புயலின் தீவிரத்தை உணர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது..
மாவட்டங்கள்: ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
இதில் சென்னையில் ஒரே நாளில் பல பகுதிகளில் மழை அதிக அளவு பெய்திருக்கிறது. சில இடங்களில் 20 செ.மீ வரை பெய்த மழையால் இதுவரை தண்ணீர் தேங்காத பகுதிகளில் கூட இப்போது மழைநீர் தேங்கி காணப்படுகிறது. 4 அடிக்கு தேங்கிய மழை நீர்! சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
பெருங்களத்தூர்: அந்தவகையில், பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், கிளாம்பாக்கம் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்றிரவு பெய்த மழையால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு முழுவதுமே தண்ணீர் சூழ்ந்துள்ளது.. சாலையின் 2 அடிக்கு கீழே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டதால், சாலையில் பெருக்கெடுக்கும் மழைநீர் பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்துவிடும் சூழல் ஏற்பட்டது.
அதனால்தான், மழைநீர் சீராக செல்வதற்கு, ஜிஎஸ்டி சாலையில் பள்ளம் தோண்டி, குழாய்கள் அமைத்து பராமரிப்பு பணிகளும் நடந்தன.. ஆனாலும், தற்போது மழை பலமாக பெய்து வருவதால், பஸ் ஸ்டாண்டின் நுழைவாயிலிலேயே குளம்போல் நீர் தேங்கிவிட்டது. இரவு நேரத்தில் வாகனங்கள் இந்த பஸ் ஸ்டாண்டை கடக்க முடியாமல் திணறின.. எனவே, தட்டு தடுமாறி, மெதுவாக ஊர்ந்தபடியேதான் வாகனங்கள் செல்ல முடிந்தது.
வாகனங்கள்: 4 நாட்களுக்கு முன்பு, இது சம்பந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருந்தது. தற்போது புயல் மழை பெய்து வரும்நிலையில், மீண்டும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மழை சூழ்ந்துள்ளது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில், பஸ் ஸ்டாண்டு முன்பு குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது.. பணிகள் நடந்துவருவதால், அது தொடர்பான ஜேசிபி உள்ளிட்ட இயந்திர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.. அந்த வாகனங்களிலும் பாதிக்கு மேல் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. கார்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அங்கேயும் மழைநீர் சுற்றிலும் சூழ்ந்துள்ளது.
தாம்பரம் பீர்க்கங்கரணை பகுதி எப்போது மழை வந்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியாகும்.. கடந்த வாரமும், இங்குள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் வீடுகளை சுற்றி 2 அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்..
முடிச்சூர்: முடிச்சூர் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்பதாகவும், எப்போது மழை வந்தாலும் இதே நிலைமைதான் என்று அந்த பகுதியில் வசிப்பவர்கள் புலம்புகிறார்கள். மேற்கண்ட பகுதிகளில், மாநகராட்சி ஊழியர்கள் விரைந்திருப்பதுடன், தேங்கியிருக்கும் தண்ணீரை, வெளியேற்றும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications