தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. அடுத்த 2 மணி நேரத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் நெல்லை,தென்காசி, ராமநாதபுரம், குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோடை வெயிலுக்கு இடையே தமிழகத்தில் கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அனல் கொதிக்க வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கோடை மழையால் வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமானது முதல் லேசான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக சில இடங்களில் மழை நீர் தேங்கலாம்.. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை புதன்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மறுநாள் மற்றும் 19. 04. 2024 அதாவது லோக்சபா தேர்தல் நாளன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20. 04. 2024 முதல் 22. 04. 2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த ஐந்து நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2° 3° செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°-40° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34°-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
18 முதல் 20 ஆம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலையாக தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2° -4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°- 41° செல்சியஸ் இருக்கக்கூடும். என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications