உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்னைக்கு கனமழை விடாது.. தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தொடங்குவதற்கு முன்பே தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யத் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகம் முழுக்க மழை கொட்டியது. இன்றும் காலையில் இருந்தே தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications