வங்கக் கடலில் இருக்குது சம்பவம்.. உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழை?
சென்னை: வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஏற்படும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை மறுநாள் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. குறிப்பாக மதிய நேரங்களில் வெளியே செல்லக் கூட யோசிக்கும் அளவிற்கு வெப்பம் அனலாக தகிக்கிறது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 9 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக மதுரை நகரம் மற்றும் மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதேபோன்று சென்னையில் மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், நாகை, ஈரோடு, பாளையங்கோட்டை, தஞ்சை, திருச்சி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் நேற்று வெயில் சதமடித்தது. தொடர்ந்து வெயிலானது 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வடக்கு அந்தமான் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகின்றது. இதன் காரணமாக வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும்.
இதன் காரணமாக அடுத்த சில நாட்கள் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோன்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்பநிலையானது 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் தமிழகத்தில் வரும் 26ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வெப்பநிலையானது அதிகபட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications