தமிழகத்தை மிரட்டும் மழை.. நோய்களைத் தடுப்பதற்கான அரசு நடவடிக்கைகள் என்ன? - மா.சுப்பிரமணியம் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மழையால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்காக அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் பருவகால நோய்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த முகாமை தொடங்கி வைப்பதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் தொடங்கி வைக்கப்படும்.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்த மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையலாம். குறிப்பாக மழைக் காலங்களில் வருகிற பாதிப்புகளான டெங்கு, மலேரியா, டைஃபாய்டு போன்ற காய்ச்சல் பாதிப்புகளுக்கு இந்த முகாம்களில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்படவுள்ளது.
அதேபோல, மழைக் காலங்களில் ஏற்படுகிற வயிற்றுப்போக்கு, வாந்தி, சேற்றுப்புண் போன்ற பாதிப்புகளுக்கு முகாம்களில் மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. அனைத்து முகாம்களிலும் தேவைப்படுகிற அளவுக்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. சென்னையைப் பொருத்தவரை 100 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு முழுவதிலும் 1,000 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து முகாம் நடைபெறாத நாள்களிலும் ஒரு தெருவிலோ, கிராமத்திலோ அல்லது ஊரிலோ ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அந்தப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நேற்றைக்கும் கூட மாவட்ட அளவிலான மருத்துவ அலுவலர்களுடனான கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் முகாம் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே இந்த ஆண்டு குளிர்கால மழையாக இருந்தாலும், கோடை மழையாக இருந்தாலும், வெப்பச்சலன மழையாக இருந்தாலும் தென்மேற்குப் பருவ மழையாக இருந்தாலும் குறித்த அளவைக் காட்டிலும் கூடுதலான மழைப்பொழிவு என்பது இருந்து வருகிறது.
அந்த வகையில், வடகிழக்குப் பருவமழையும் அதிகளவிலே பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முதல்வர் 10க்கும் மேற்பட்ட சேவைத் துறைகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவிலான கூட்டத்தை நடத்தியுள்ளார். அதில், வடகிழக்குப் பருவமழையை எப்படி எதிர்கொள்வது, அதன் பாதிப்புகளை எவ்வாறு தடுப்பது, நோய் பாதிப்புகளுக்கான தீர்வு உள்ளிட்டவை குறித்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications